கக்கூஸ் ஆவணப் படத்தை முன்னிட்டு தோழர் திவ்யாவை திட்டுபவர்களுக்கும் அச்சுறுத்துபவர்களுக்கும் இளந்தமிழகம் இயக்கத்தின் கண்டனம்.
வணக்கம்,
கக்கூஸ் ஆவணப்படத்தை எடுத்த தோழர் திவ்யாவுக்கு கொலை மிரட்டலாகவும் கொடுஞ்சொல் வசவுகளாகவும் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படத்தில் உள்ள சில வாசகங்கள் ஆட்சேபகரமாக இருக்கிறதென்றும் அதன் பொருட்டு தோழர் திவ்யா மீது வழக்குப் போடப் போவதாகவும் அவரது ‘அட்ரஸ்’ தேடிக்கொண்டிருப்பதாகவும் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னார். அதை தொடர்ந்தே சாதிய மேலாதிக்க உணர்விலும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க திமிரிலும் தோழர் திவ்யாவிடம் தொலைபேசியில் வன்மத்தைக் கக்கி வருகின்றனர் சிலர். கொலை மிரட்டல் வரை போயுள்ளனர்,பின் தொடரவும் செய்துள்ளனர்.
ஆவணப்படத்தின் சாரம் என்பது இன்றும்கூட இந்நாட்டில் உள்ள ஒரு பகுதி மக்கள் மனிதனின் மலத்தை கையால் அள்ளும் அநீதிக்கு ஆட்பட்டுள்ளனர் என்பதை கேள்விக்குள்ளாகுவதும். அந்த ஆவணப்படத்தில் கையால் மலம் அள்ளும் அநீதிக்கு சில சாதிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் ஆளாகியுள்ளனர் என்று வருவதோடு வேறு சாதிகளைச் சேர்ந்த வறியவர்களில் அரிதிலும் அரிதான சிலரும் இந்த அநீதிக்கு ஆட்பட்டுள்ளனர் என்பதும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவ்விடத்தில் வரும் வசனங்கள் பற்றி டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்குமானால் அது விவாதத்திற்குரியது ஆகும். அதே நேரத்தில், மனிதனின் மலத்தைக் கையால் அள்ளும் அநீதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், இதன் பொருட்டு சிலர் தொலைபேசியில் அழைத்து மிரட்டுவதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும், பின் தொடர்வதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, ஆரோக்கியமற்றதுமாகும். மேலும், தோழர் திவ்யா சி.பி.ஐ.(மா.லெ) விடுதலை கட்சியின் உறுப்பினராவார். மார்க்சிய லெனினிய ஆற்றலகள் சாதி ஆதிக்க எதிர்ப்புக் களத்தில் நடத்தியுள்ள வீரஞ்செறிந்த போராட்டங்களையும் குறிப்பாக தென் தமிழகத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்றையும் அச்சமூகங்களிடையே செயல்படும் டாக்டர் கிருஷ்ண்சாமி உள்ளிட்ட எவரும் மறுக்கமாட்டார்கள்.
மேலும் டாக்டர் கிருஷ்ணசாமிகூட தோழர் திவ்யா இருக்கும் கட்சியின் மாணவர் இயக்கத்தில் இருந்ததாக அறிகிறோம். பிற்காலத்தில் புதிய தமிழகம் என்ற பெயரில் கட்சிக் கண்ட அவர், இன்று ’அகண்ட பாரதம்’ காணத் துடிக்கும் பழமைவாத சக்திகளோடு கைகோர்த்து நிற்பதுதான் காலத்தின் அவலம். இந்த சறுக்கல்தான் சாதி ஒழிப்புக் களத்தில் நிற்கும் தோழர்களை எதிரியாக சித்திரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. சந்தடி சாக்கில் பா.ச.க., ஆர்.எஸ்.எஸ். காரர்களும் இவ்விசயத்தில் புகுந்து தோழர் திவ்யாவை மிரட்டும் வேலையைச் செய்துள்ளதாக அறிகிறோம். பா.ச.க – ஆர்.எஸ்.எஸ். ஸின் கோட்பாடும் நடைமுறையும் சாதியடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எள்முனையளவும் துணை நிற்கப் போவதில்லை.
இந்நாட்டில் மனித மலத்தைக் கையால் அள்ளும் வேலையைச் செய்யக் கூடியவர்கள் இருக்கும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சச்சரவின் போது எவ்வளவு வருந்தியிருக்கக் கூடும் என்பதை டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும். சாதி ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வளர்ந்து வந்த டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் மனிதனின் மலத்தைக் கையால் அள்ளும் அநீதிக்கு எதிரான நியாய உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என்பதே சனநாயக சக்திகளின் எதிர்ப்பாக்கும். சாதி ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் சாதிக் கட்டமைப்பை நொறுக்கும் சாதி ஒழிப்பு இயக்கமாக விரிவடையாத யதார்த்தத்தை இவையெல்லாம் உணர்த்தி நிற்கின்றன.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தோழர் திவ்யா மீது நிகழ்த்தப்பட்டு வரும் வன்சொல் தாக்குதல்களையும் மிரட்டல்களையும் வன்மையாக கண்டித்து உடனடியாக நிறுத்துமாறு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளிப்படையாக அறிவிப்பதுதான் சரியானதாகும். ஆவணப்படம் குறித்த மாற்றுக் கருத்துகளை பேசுவதன் மூலம் மிக எளிதில் தீர்த்துக் கொள்ள முடியுமாகையில் இரு தரப்பும் பரஸ்பரம் முன்முயற்சி எடுப்பதும்கூட சூழலைக் கையாளப் பொருத்தமுடையதாக இருக்கும்.
தோழர் திவ்யாவைத் தொலைபேசி வழியாக திட்டுபவர்களையும் மிரட்டுபவர்களையும் கண்டித்து நிலைமையைச் சீர்செய்ய டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று இளந்தமிழகம் இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழகம் இயக்கம்.